புது தில்லி: கரோனா தொற்று காரணமாக தமிழகம், மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், பிரதமர் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓராண்டுக்கான ஊதியத்தில் 30% தொகை பிடித்தம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிதிச் சிக்கன நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், ஆளுநர்களும் தாமாக முன்வந்து ஊதிய பிடித்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் ஊதியம் கரோன தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும்.
ஏப்ரல் 1ம் தேதி 2020ல் இருந்து இந்த ஊதியம் பிடித்தம் நடைமுறைக்கு வருகிறது. மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அதாவது 2020 - 21 மற்றும் 2021 - 22ம் ஆண்டுகளுக்கு எம்.பி.களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படாது. இந்த வகையில் மிச்சம்பிடிக்கப்படும் ரூ.7,900 கோடி பணம் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு படிகள உட்பட மாதந்தோறும் 2 லட்சம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது.