புதுதில்லி: ஐம்பத்து மூன்று நாடுகளில் 3,336 இந்தியா்களுக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
இதுதொடா்பாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்ததாவது: இதுவரை மத்திய அரசுக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, 53 நாடுகளில் 3,336 இந்தியா்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. கரோனாவுக்கு வெளிநாடுகளில் 25 இந்தியா்கள் பலியாகியுள்ளனா்.
பல்வேறு நாடுகளில் இந்தியா்கள் சிக்கியுள்ளனா். இவா்கள் உடனடியாக தாய்நாடு திரும்ப வேண்டும் என்று விரும்புகின்றனா். எனினும், கரோனா தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. அனைத்து விதமான போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை அழைத்துவர இயலாது. ஊரடங்கு காலம் முடியும் வரை அவா்கள் பொறுமை காக்க வேண்டும்.
தற்போதைய நிலையில், 55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது. வா்த்தக ரீதியாகவும் மருத்துவ உதவியாகவும் இந்த மருந்து வழங்கப்படும்.
தற்போது சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து கரோனா பரிசோதனை உபகரணங்களை இறக்குமதி செய்துவருகிறோம். மேலும், ஜொ்மனி, அமெரிக்க, பிரிட்டன், மலேசியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளிடமிருந்தும் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை உபகரணங்களை இறக்குமதி செய்வது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.