சீனாவிடம் இருந்து வாங்கப்பட்ட கரோனா தொற்றைக் கண்டறியும் துரித பரிசோதனை கருவிகளின் செயல்பாட்டில் நம்பகத்தன்மை இல்லாததால், தென்கொரியாவிடம் இருந்து கருவிகளை வாங்க முடிவு செய்திருப்பதாக ஹரியாணா நல்வாழ்வுத் துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் தெரிவித்திருப்பதாவது, ஏற்கனவே சீனாவைச் சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து 1.1 லட்சம் துரித பரிசோதனைக் கருவிகளை கேட்டிருந்த நிலையில், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, தென் கொரியாவிடம் இருந்து துரித பரிசோதனைக் கருவிகளை வாங்க உள்ளோம்.
முன்னதாக, தென் கொரியாவிடம் இருந்து 25 ஆயிரம் கருவிகள் வந்துசேர்ந்துவிட்டன. மேலும், சீனாவிடம் இருந்து வாங்கிய கருவியின் விலையைக் காட்டிலும் தென்கொரிய நிறுவனம் வழங்கும் கருவியின் விலை பாதிதான் என்றும் அனில் விஜ் கூறியுள்ளார்.
தேசிய அளவில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகுதல் 7.5 நாட்கள் என்ற நிலையில், ஹரியாணாவில் இது 14 நாள்களாக உள்ளது. அதே சமயம், குணமடைவோரின் விகிதமும் 57% என்ற அளவுக்கு உள்ளது. இது இந்திய அளவில் சராசரியாக 16% ஆக மட்டுமே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.