தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஆண் செவிலியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மருத்துவர்கள் உட்பட 40 மருத்துவப் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் இரைப்பை குடல் பிரிவில் பணியாற்றி வந்த 30 வயது ஆண் செவிலியருக்கு கரோனா இருப்பது புதன்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்தப் பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 40 மருத்துவப் பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், 40 மருத்துவப் பணியாளர்களுக்கும், அந்தப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சில நோயாளிகளுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது வரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 4 நோயாளிகள் உட்பட 22 பேரின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளி வந்துள்ளன. அவற்றில் யாருக்கும் கரோனா இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மற்றவர்களின் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் கூறுகையில், ஆண் செவிலியர் கடந்த சனிக்கிழமை மருத்துவரை செல்லிடப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு, தனக்கு காய்ச்சல் இருப்பதாகக் கூறினார். சோதனைக்காக திங்கள்கிழமை வரச்சொன்ன நிலையில், அவருக்கு அன்று பணி இருந்ததால் பணிக்குச் சென்றுவிட்டு புதன்கிழமைதான் சோதனைக்கு வந்தார். அன்று இரவு அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது பற்றி வியாழக்கிழமைதான் அனைவருக்கும் தெரிய வந்தது. ஆண் செவிலியர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.