அமெரிக்காவில் இந்திய மருத்துவருக்கு வித்தியாசமாக தெரிவிக்கப்பட்ட நன்றி
கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வரும் மைசூரைப் பின்புலமாகக் கொண்ட இந்தியப் பெண் மருத்துவருக்கு அமெரிக்காவில் வாகனப் பேரணி மூலம் நன்றி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வரும் மைசூரைப் பின்புலமாகக் கொண்ட இந்தியப் பெண் மருத்துவருக்கு அமெரிக்காவில் வாகனப் பேரணி மூலம் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
மைசூரில் மருத்துவப் படிப்பை முடித்து அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரிந்து வருபவர் உமா மதுசூதனன். இவர் அங்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சையளித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அவருடைய இந்த தன்னலமற்ற சேவையைப் பாராட்டும் வகையில் அவரது வீட்டின் அருகாமையில் உள்ளவர்கள் உட்பட ஏராளமானோர் வாகனப் பேரணி நடத்தி நன்றியைத் தெரிவித்துள்ளனர். காவலர்கள் வாகனம், தீயணைப்பு வாகனம் உட்பட சுமார் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வரிசையாக பேரணி மூலம் வந்து அவருடைய சேவைக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.
ஒவ்வொரு நாட்டிலும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் களத்தில் இறங்கி பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள் என பலருக்கும் பல்வேறு வகையில் நன்றி தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் மக்கள் ஒளி எழுப்பியும் கை தட்டியும் நன்றியை வெளிப்படுத்தினர். இந்த வகையில் அமெரிக்காவில் இவருக்கு வாகனப் பேரணி மூலம் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடு அமெரிக்காதான். அங்கு இதுவரை நோய்த் தொற்றால் மொத்தம் 54,265 பேர் பலியாகியுள்ளனர், 9.60 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.