ஒடிசாவில் புதிதாக நால்வருக்கு கரோனா: பாதிப்பு 122 ஆனது
ஒடிசாவில் புதன்கிழமை ஒரு பெண் உள்பட நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
புவனேஸ்வர்: ஒடிசாவில் புதன்கிழமை ஒரு பெண் உள்பட நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மொத்தம் அந்த மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எப்ரல் 14-க்கு பிறகு தலைநகர் புவனேஸ்வரைச் சேர்ந்த 77 வயது முதியவருக்குப் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை புவனேஸ்வரில் நோய்த் தொற்று பாதிப்பு 47 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 26 பேர் மீண்டுள்ளனர்.
புவனேஸ்வரை தவிர, கியோஞ்சர், தியோகர் மற்றும் ஜார்சுகுடா மாவட்டங்களிலிருந்து தலா ஒரு புதிய வழக்குப் பதிவாகியுள்ளதாகத் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது. புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் சமீபத்தில் மேற்கு வங்கத்திலிருந்து திரும்பி வந்தவர்களாவர்.
கியோன்ஜார், தியோகர் மற்றும் ஜார்சுகுடா ஆகிய மாவட்டத்தில் முதன்முறையாக கரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. மாநிலத்தின் 30 மாவட்டங்களில் 14 மாவட்டங்களில் கரோனா தொற்று பதிவாகியுள்ளன. இதன் மூலம், ஒடிசாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 122 ஆக உயர்ந்தது. அவர்களில் 83 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 38 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் ஒருவர் பலியாகியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை 2,421 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டன. மொத்தம் இதுவரை 29,108 பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.