சென்னை: தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாரம்பரியம் மிக்க சித்த மருத்துவத்தின் மூலம் இதுவரை 5,725 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனாவை கட்டுப்படுத்த மருந்துகளை கண்டறியும் சோதனையில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலும் இரண்டு நிறுவனங்கள் மூலம் தடுப்பு மருந்து பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே தமிழகத்தில் பாரம்பரியம் மிக்க சித்த மருத்துவமுறைகளை பயன்படுத்தி இதுவரை கிட்டத்தட்ட 6 ஆயிரம் கரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 11 கரோனா சித்த மருத்துவ பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 2 சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று (சனிக்கிழமை) வரை 5,725 பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னையில் ஜவஹர் வித்யாலயா மற்றும் டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் கரோனா சித்த மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இரு மையங்களிலும் சித்த மருத்துவ முறையில் 3,200 பேருக்கு இதுவரை சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்த இரு மையங்களிலும் தற்போது 434 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து கரோனா சித்த மருத்துவ பரிசோதனை மையங்களிலும் 715 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக வேலூரில் அதிக அளவிலான கரோனா நோயாளிகள் சித்த மருத்துவ முகாமில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். சேலம் மற்றும் புதுக்கோட்டையில் புதிதாக 2 சித்த மருத்துவ பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.