புதியக் கல்விக்கொள்கையின்படி ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ் 300 க்கும் மேற்பட்ட கல்லூரிகளை இணைக்க முடியாது என்று கல்வி அமைச்சர் பொக்ரியால் தெரிவித்தார்.
புதன்கிழமை நடைபெற்ற கரோனாவிற்கு பிறகான கல்வி எனும் இணையக் கருத்தரங்கில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் பொக்ரியால், “ தற்போது ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ் 800க்கும் அதிகமான கல்லூரிகள் இயங்குகின்றன. இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான கல்லூரிகளை எப்படி ஒரு பல்கலைக்கழகத்தால் சிறப்பாக நிர்வகிக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் “புதியக் கல்விக் கொள்கையின்படி இனி ஒரு பல்கலைக்கழகம் 300 க்கும் மேற்பட்ட கல்லூரிகளை நிர்வகிக்காது. மாறாக பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமானால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.”என்று கூறினார்.
கல்லூரிகளுக்கு அதிக சுயாட்சி வழங்குவதற்கும், இணைப்பு முறையை அகற்றுவதற்கும் புதிய தேசியக் கல்வி கொள்கையின் மூலம் பல்கலைக்கழகங்களை அமைப்பது அவசியமாகிறது என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.
"நான் சமீபத்தில் ஒரு பல்கலைக்கழகத்திற்கு பயணம் செய்திருந்தேன். அந்த பல்கலைக்கழகத்துடன் எத்தனை கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன என்று துணைவேந்தரிடம் கேட்டபோது, அவர் 800 கல்லூரிகள் என்றார். 800 கல்லூரிகளின் முதல்வர்களின் பெயர்களை எந்த துணைவேந்தரால் நினைவில் வைக்க முடியும்? ” என்று மத்திய கல்வி அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
கடந்த மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த புதிய கொள்கையின்படி, கல்லூரிகளுக்கு தரப்படுத்தப்பட்ட சுயாட்சி அங்கீகாரத்தை வழங்குவதற்கு வெளிப்படையான அங்கீகார முறை நிறுவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
"தற்போது 45 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 8 ஆயிரம் மட்டுமே தன்னாட்சி பெற்றவை. அவற்றின் தரத்தில் முன்னேற்றம் அடையும்போது அவைகளுக்கு சுயாட்சி அங்கீகாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என அமைச்சர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.