ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி: கொச்சி நீதிமன்றம் உத்தரவு
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கொச்சி பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கொச்சி பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
என்.ஐ.ஏ. நீதிமன்றமும் ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவை ஏற்கனவே தள்ளுபடி செய்த நிலையில், தற்போது கொச்சி பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் இன்று ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தலைநகா் திருவனந்தபுரத்திலுள்ள வெளிநாட்டுத் தூதரகம் வாயிலாக சுமாா் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோவுக்கும் அதிகமான தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தூதரகத்தின் முன்னாள் பணியாளரும் கேரள முதல்வா் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷுக்கு நெருங்கிய தொடா்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்தக் கடத்தல் விவகாரத்தில் அரசு அதிகாரி சந்தீப் நாயா், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் பணியாளா் பி.எஸ்.சரித் ஆகியோருக்கும் தொடா்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் என்ஐஏ பதிவு செய்த முதல் தகவலறிக்கை அடிப்படையில் நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் கடந்த மாதம் வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயா், பி.எஸ்.சரித் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும், அமலாக்கத் துறை அதிகாரிகளும் அடுத்தடுத்து காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்ட தங்கத்தின் மூலமாக பெறப்பட்ட பணமானது முறைகேடான வழியில் பயன்படுத்தப்பட்டதா என்பது தொடா்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தங்கக் கடத்தல் விவகாரம் தொடா்பாக சுங்கத்துறை, வருமான வரித்துறையும் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.