போர்க் கூட்டணி? பாக். ராணுவத் தலைமைத் தளபதியுடன் சௌதி பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!
பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத் தளபதி மற்றும் சௌதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர் இடையிலான சந்திப்பு குறித்து...
சௌதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மானை பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து சௌதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் கட்டமைப்புகளின் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், ஈரானின் தாக்குதல்கள் குறித்து சௌதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான் மற்றும் பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் சனிக்கிழமை (மார்ச் 7) நேரில் சந்தித்து உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில், இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சௌதி அரேபியாவின் மீதான தாக்குதல்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொண்டதாக, அந்நாட்டு அரசின் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இதுபற்றி பாகிஸ்தான் அரசின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
கடந்த 2025 செப்டம்பரில், சௌதி அரேபியா மற்றும் அணு ஆயுத சக்தி கொண்ட பாகிஸ்தான் இடையில் ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்ததின் அடிப்படையில், இருநாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீதான தாக்குதல் மற்றொன்றின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.