ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பருவமழை காரணமாக வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் இல்லங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் மழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளதால், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளம் காரணமாக சத்தீஸ்கர் மாநில கூட்டத்தொடர் நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வடக்கு சத்தீஸ்கரில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால், அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுநிலை, அடுத்த 2 நாள்களில் வடக்கு மத்தியப்பிரதேசம் மற்றும் தெற்கு உத்தரப்பிரதேசத்தை நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், அலைகள் வழக்கத்திற்கு மாறாக இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.