மகாராஷ்டிரம்: நடத்துனர் உடையில் இனி கண்காணிப்பு கேமரா
மகாராஷ்டிர மாநிலம் ஓளரங்காபாத் நகரில் பேருந்து நடத்துனர் உடையில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் ஓளரங்காபாத் நகரில் பேருந்து நடத்துனர் உடையில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து பயணத்தின்போது பயணிகளின் நடத்தை மற்றும் மற்ற செயல்களை கண்காணிக்க நடத்துனர் உடையில் சிறிய ரக கேமராவை பொருத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு பெண் நடத்துனர் பணியில் இருந்தபோது பயணிகள் சிலர் எல்லைமீறலில் ஈடுபட்டதாக புகார் வந்தது.
இதன் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக நடத்துனர் உடையின் முன்பக்கத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஒளரங்காபாத் நகர மேம்பாட்டு நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் பயணிகள் கண்காணிப்பை உறுதி செய்ய இயலும், மேலும் பேருந்தில் அவர்களின் அத்துமீறிய நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒளரங்காபாத் நகராட்சியில் நூறு பேருந்துகள் உள்ள நிலையில், அவற்றில் 29 பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமுடக்க காலத்தில் கரோனா நோயாளிகளுக்காக பேருந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் முதலே ஒளரங்காபாத்தில் பயணிகளுக்காக பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.