வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுக அல்லது பதவி விலகுக: மம்தா பானர்ஜி ஆவேசம்
மக்கள் விரோத வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மக்கள் விரோத வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் நடந்த ஒரு பேரணியில் உரையாற்றிய முதல்வர் மம்தா பானர்ஜி, அமைதியாக இருப்பதைவிட பாஜக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி அதனால் சிறையில் இருப்பதே மேல் என்று தெரிவித்தார்.
மேலும், தில்லியில் நடைபெறும் வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அவர், பாஜக அரசு உடனடியாக மக்கள் விரோத வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் அல்லது உடனடியாக பதவி விலக வேண்டும். விவசாயிகளின் உரிமைகளை பலியாக்கிய பின்னர் ஒருபோதும் ஆட்சியில் இருக்கக்கூடாது என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.
மேலும், மேற்கு வங்கத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சியை பிடிக்க முடியாது என்று கூறியதுடன், தொடர்ந்து மூன்றாவது முறையாக நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னரும் இலவச ரேஷன் பொருள்கள் வழங்குவது தொடரும் என்று அறிவித்தார்.
294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் 2021 ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது.