‘முழுஅடைப்புக்கு எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்’: யோகி ஆதித்யநாத்
நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கோர வேண்டுமென உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கோர வேண்டுமென உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. இதுவரையில் நடைபெற்ற 5 கட்ட பேச்சுவாா்த்தைகளிலும் உறுதியான முடிவுகள் எடுக்கப்படாத நிலையில் செவ்வாய்க்கிழமை முழுஅடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள், சமாஜ்வாதி, தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சிவசேனை, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா உள்ளிட்ட கட்சிகள் விவசாயிகளின் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முழு அடைப்பிற்கு ஆதரவளிக்கும் எதிர்க்கட்சிகள் தேசத்தின் முன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.
"எதிர்க்கட்சிகள் வேளாண் சட்டங்களை எதிர்ப்பது என்ற பெயரில் அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டு, முழு அடைப்பிற்கான அழைப்புக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் துரோகம் இழைக்கின்றன" என்று அவர் குற்றம்சாட்டினார்.