விவசாயிகள் போராட்டம்: தில்லி செல்லும் வாகனங்களுக்கு இலவச டீசல்
வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக தில்லி நோக்கி செல்லும் விவசாயிகளுக்கு இலவச டீசல் வழங்கப்படுகிறது.
வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக தில்லி நோக்கி செல்லும் விவசாயிகளின் வாகனங்களுக்கு இலவச டீசல் வழங்கப்படுகிறது.
சிரோமணி அகாலி தளம் கட்சியை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் தில்லி - அமிர்தசரஸ் தேசிய நெடுஞ்சாலையில் தில்லி நோக்கி செல்லும் வாகனங்களுக்கு இலவச டீசல் வழங்கி வருகிறார்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளுடன் மத்திய அரசு ஐந்து கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இதனிடையே தில்லியில் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்து விவசாயிகள் தில்லி நோக்கி புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தில்லி நோக்கி செல்பவர்களுக்கு தில்லி - அமிர்தசரஸ் நெடுஞ்சாலையில் சிரோமணி அகாலி தளத்தை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் வாகனங்களுக்கு இலவச டீசல் வழங்கி வருகிறார்.
இது குறித்து பேசிய தன்னார்வலர் குருஷரன் சிங், தில்லி போராட்டத்தில் கலந்துகொள்ள மக்களை ஊக்குவிக்கும் வகையில் இலவச டீசல் வழங்கிவருவதாகக் கூறினார். இதனை உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.