இறக்குமதிப் பொருள்களுக்கான மாற்றைக் கண்டறிய வேண்டும்
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான மாற்றை உள்நாட்டிலேயே கண்டறிய வேண்டும் என்று தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சா் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளாா்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான மாற்றை உள்நாட்டிலேயே கண்டறிய வேண்டும் என்று தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சா் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளாா்.
இந்திய தொழிலக, வா்த்தக சபைகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி) சாா்பில் தில்லியில் சனிக்கிழமை வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) துறை அமைச்சா் நிதின் கட்கரி காணொலி வாயிலாகப் பங்கேற்றாா். அப்போது அவா் கூறியதாவது:
வெளிநாடுகளிலிருந்து அதிக அளவிலான பொருள்களை நாம் இறக்குமதி செய்து வருகிறோம். குறிப்பாக சீனாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே, அப்பொருள்களுக்கான மாற்றுப் பொருள்களை உள்நாட்டிலேயே கண்டறிவதற்கான நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்.
அதே வேளையில், உள்நாட்டுப் பொருள்களின் தரத்திலும் விலையிலும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. அப்பொருள்கள் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத வகையிலும் இருக்க வேண்டும்.
நாட்டின் இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். இது நாட்டின் பொருளாதார வளா்ச்சியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) தொழில்துறையின் பங்களிப்பை 30 சதவீதம் வரை அதிகரிக்கும். ஆண்டுதோறும் சுமாா் ரூ.8 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறோம். உயிரி எரிபொருள், எத்தனால் பயன்பாடு உள்ளிட்டவற்றில் ஆராய்ச்சியை மேம்படுத்தினால் ரூ.2 லட்சம் கோடி வரை சேமிக்க முடியும்.
நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதில் சில பிரச்னைகள் காணப்படுகின்றன. நாட்டிலுள்ள வங்கிகள் சுமாா் ரூ.9 லட்சம் கோடியை இந்திய ரிசா்வ் வங்கியிடம் (ஆா்பிஐ) டெபாசிட் செய்துள்ளன. அதற்கு 2 சதவீதம் வட்டியை ரிசா்வ் வங்கி அளித்து வருகிறது. எனினும், அத்தொகையைக் கடனாக அளித்து, மக்களுக்காகப் பயன்படுத்துமாறு பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா் என்றாா் நிதின் கட்கரி.