அலைக்கற்றை ஏலத்துக்கு ஒப்புதல்: பிரகாஷ் ஜாவடேகர்
மத்திய தொலைத் தொடர்பு துறையின் அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஏலத் திட்டத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
புது தில்லி: மத்திய தொலைத் தொடர்பு துறையின் அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஏலத் திட்டத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மத்திய தொலைத் தொடர்பு துறையின் அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஏலத் திட்டத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.
இதன் மூலம் ஏலத்தில் வெற்றி பெறும் செல்லிடப்பேசி சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படும்.
700 , 800, 900 , 1800 , 2100 , 2300 மற்றும் 2500 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை பேண்டில் ஸ்பெக்ட்ரம் ஏலம் இருக்கும். 20 ஆண்டு காலத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படும். மொத்தம் 2251.25 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை ரூ. 3,92,332.70 கோடி மதிப்பில் வழங்கப்படுகிறது.
ஏலம் மூலம் ஸ்பெக்ட்ரம் பயன்படுத்துவதற்கான உரிமையை வென்று, தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க் திறனை அதிகரிக்க முடியும், அதே வேளையில் புதிய நிறுவனங்கள் தங்கள் சேவைகளைத் தொடங்க முடியும்.
ஏலத்தில், ஏலதாரர்கள் விதிமுறைகள் / நிபந்தனைகளை ஏற்க வேண்டும். ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் முழு ஏலத் தொகையையும் ஒரே நேரத்தில் செலுத்தலாம். அல்லது 700, 800, 900 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை ஸ்பெக்ட்ரமுக்கு 25 சதவீதம் அல்லது 1800, 2100 , 2300 2500 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமுக்கு 50 சதவீதமும் செலுத்தி, மீதத் தொகையை இரண்டு வருட கால அவகாசத்திற்குப் பிறகு, அதிகபட்சம் 16 சமமான வருடாந்திர தவணைகளில் செலுத்தலாம்.
ஏலத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வது வெளிப்படையான நடைமுறை. போதிய அளவு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வது, வாடிக்கையாளர்களுக்கு தரமான தொலைத் தொடர்பு சேவையை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.