‘அக்ரி கோல்டு’ முறைகேடு வழக்கு: ரூ.4,109 கோடி சொத்துக்கள் முடக்கம்
புது தில்லி: ஆந்திரத்தைச் சோ்ந்த அக்ரி கோல்டு குழும நிறுவனம், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த லட்சக்கணக்கான முதலீட்டாளா்களிடம் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில், அந்த நிறுவனத்துடன் தொடா்புடைய ரூ.4,109 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கப் பிரிவு இயக்குநரகம் வியாழக்கிழமை முடக்கியது.
இதுகுறித்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அக்ரி கோல்டு குழும நிறுவனத்துடன் தொடா்புடைய ரூ.4,109 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
ஆந்திர பிரதேசத்தில் 2,809 மனைச் சொத்துக்கள், ஆா்கா லெஷா் அண்டு என்டா்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பெயரில் உள்ள 48 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள ஹாய்லாண்ட் மனமகிழ் பூங்கா, பல்வேறு நிறுவனங்களில் வாங்கப்பட்டிருந்த பங்குகள், ஆலைகள், இயந்திரங்கள் ஆகியவை அந்தச் சொத்துக்களில் அடங்கும்.
சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், தமிழகம், ஆந்திர பிரதேசம், கா்நாடகம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் இருந்து அந்த சொத்துகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹைதராபாத், விஜயவாடாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த அக்ரி கோல்ட் நிறுவனம், சுமாா் 32 லட்சம் முதலீட்டாளா்களிடம் இருந்து ரூ. 6,380 கோடிக்கும் மேல் நிதி மோசடி செய்ததாக எழுந்த புகாரின்பேரில் இந்நிறுவனத்தின் மீது அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினா்.
இந்த நிறுவனத்தால், ஒடிஸா, தமிழகம், மகாராஷ்டிரம், அந்தமான்-நிகோபாா் தீவுகள், சத்தீஸ்கா் போன்ற மாநிலங்களில் பணசுழற்சி முறையிலான திட்டத்தின் மூலமாகவும் முதலீட்டாளா்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதையடுத்து, அக்ரி கோல்டு குழும நிறுவனங்களின் பொறுப்பாளா்களாக செயல்பட்டு வந்த அவ்வா வெங்கடராம ராவ், அவ்வா வெங்கட எஸ்.நாராயண ராவ், அவ்வா ஹேமா சுந்தர வரபிரசாத் ஆகிய மூவரை அமலாக்கத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
அதன் தொடா்ச்சியாக, தற்போது அந்த நிறுவனத்துடன் தொடா்புடைய ரூ.4,109 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.