மகாராஷ்டிரத்தில் ஆட்சியைக் கவிழ்க்க மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது: சஞ்சய் ரௌத் குற்றச்சாட்டு
மகாராஷ்டிரத்தில் ஆட்சியைக் கவிழ்க்க மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரௌத் குற்றம்சாட்டினார்.
மும்பை: மகாராஷ்டிரத்தில் ஆட்சியைக் கவிழ்க்க மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரௌத் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
கடந்த ஓராண்டாக பாஜகவை சேர்ந்த சில தலைவர்கள் என்னை தொடர்புகொண்டு வருகின்றனர். மேலும் மகாராஷ்டிர அரசை கவிழ்ப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசுக்கு ஆதரவளிக்கக் கூடாது என அவர்கள் எனக்கு அழுத்தம் கொடுப்பதோடு, அச்சறுத்தியும் வருகின்றனர்.
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரûஸ சேர்ந்த 22 எம்எல்ஏக்களின் பட்டியல் தங்களிடம் உள்ளதாகவும், மத்திய விசாரணை முகமைகளின் நெருக்கடி மூலம் அவர்கள் பதவியை ராஜிநாமா செய்யும் சூழலுக்கு ஆளாவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
அமலாக்கத்துறை எனது மனைவிக்கு அனுப்பியுள்ள அழைப்பாணை அனுப்பியுள்ள விவகாரம் தொடர்பாக சரத்பவாருடன் ஆலோசிக்க உள்ளேன். நான் பால் தாக்கரேவின் சிவசேனை வீரன். பாஜக தலைவர்களை நான் அம்பலப்படுத்துவேன். நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்று அவர்களும் நாட்டைவிட்டு வெளியேறுவார்கள்.
பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணைக்கு உட்படுத்தும் வகையில் பாஜகவைச் சேர்ந்த 120 நிர்வாகிகளின் பட்டியல் என்னிடம் உள்ளது. அரசியல் எதிராளிகளிடம் நேருக்கு நேர் மோத இயலாமல், சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக மத்திய விசாரணை முகமைகளை பாஜக ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.
நாங்கள் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வீடு வாங்குவதற்காக எனது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரது நண்பரிடமிருந்து கடன் பெற்றார். அதன் விவரங்கள் வருமான வரித் துறையிடமும், எனது மாநிலங்களவை பிரமாணப் பத்திரத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென அமலாக்கத் துறை இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் ஆட்சியை கவிழ்க்க பாஜக நவம்பர் வரை காலஅளவு நிர்ணயித்திருந்தது. தற்போது மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி அமைத்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளை குறிவைத்துள்ளனர். அவர்கள் அழைப்பாணை அனுப்பட்டும், கைது செய்யட்டும். ஆனால் ஆட்சி நிலையாக தொடரும் என்றார்.
பிஎம்சி வங்கி ஊழல் வழக்கில் தொடர்புள்ள நபரிடம் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட சஞ்சய் ரௌத் மனைவி வர்ஷா ரௌத்திடம் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.