மாணவர்களுக்கு 73 லட்சம் முகக்கவசங்கள்: பள்ளிகள் திறப்பையொட்டி பிகாரில் நடவடிக்கை
பிகார் மாநிலத்தில் பள்ளிகள் திறக்க குறுகிய காலமே உள்ள நிலையில் கரோனா முன்னெச்சரிக்கை பணிகள் தொடங்கியுள்ளன.
பிகார் மாநிலத்தில் பள்ளிகள் திறக்க குறுகிய காலமே உள்ள நிலையில் கரோனா முன்னெச்சரிக்கை பணிகள் தொடங்கியுள்ளன.
கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முழுவதும் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதிகரித்து வரும் தொற்று பரவல் காரணமாக பிகாரில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது தள்ளிப்போனது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என கடந்த 18ஆம் தேதி அம்மாநில அரசு அறிவித்தது.
இந்நிலையில் பள்ளிகள் திறக்க குறுகிய காலமே இருப்பதால் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது.
பிகார் கல்வித் துறை அரசு பள்ளிகளில் படிக்கும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான ஒவ்வொரு மாணவருக்கும் தலா இரண்டு முகக்கவசங்களை வழங்குவதற்காக 73 லட்சத்துக்கும் மேற்பட்ட முகக்கவசங்களை வாங்க உள்ளது.
இதுதொடர்பாக மாநில கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சஞ்சய் குமார் கூறுகையில், “கடந்த கல்வியாண்டின் சேர்க்கை புள்ளிவிவரத்தின் அடிப்படையில், 38 மாவட்டங்களில் 9 முதல் 12 ஆம் வகுப்பில் 36,61,942 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாணவரும் தலா இரண்டு முகக்கவசங்களை இலவசமாகப் பெறுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மாநில கல்வி அலுவலர்கள் ஜனவரி 4ஆம் தேதிக்குள் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் முகக்கவசங்கள் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.