தில்லி தேர்தலில் வாக்களிக்க ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இலவச பயணம்!
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இலவசமாக பயணிக்கலாம் என அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இலவசமாக பயணிக்கலாம் என அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு வருகிற பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு கட்சிகளின் இறுதிக்கட்ட பிரச்சாரங்களும் சூடு பிடித்துள்ளன.
இந்நிலையில், தில்லி வாக்காளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த ஊருக்குச் செல்ல ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இலவச விமான டிக்கெட்டை வழங்குகிறது.
வேலைநிமித்தம் காரணமாக தில்லியைச் சேர்ந்தவர்கள் வேறு பகுதிகளில் இருந்தால் அவர்கள் வருகிற 8ம் தேதி அன்று தில்லிக்குச் செல்ல ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இலவசமாக பயணிக்கலாம். இதற்காக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்தலில் வாக்களிக்க 8ம் தேதி பயணிப்பவர்களுக்கு மட்டுமே இலவச டிக்கெட் வழங்கப்படும். ஆனால், 8ம் தேதியே தில்லிக்குச் சென்று அன்றைய தினமே திரும்பி வரும்பட்சத்தில் இரண்டுக்கும் இலவச டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'வாக்களிப்பது ஜனநாயகத்தின் முக்கிய கடமை. மக்கள் பலர் வேலை காரணமாக வேறு இடங்களில் வேலை செய்வதால் அவர்களால் உடனடியாக சொந்த ஊருக்கு வாக்களிக்க வர முடியாது. எனவே, ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்கும் பொருட்டு, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது' என்று அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி அஜய்சிங் தெரிவித்தார்.