இண்டிகோ விமானத்தில் என்னால் பயணிக்க இயலாது: பிரபல பாலிவுட் இயக்குநரின் வித்தியாச எதிர்ப்புக் குரல்
இண்டிகோ விமானத்தில் என்னால் பயணிக்க இயலாது என்று பிரபல ஸ்டான்ட் அப் காமெடியன் குணால் கம்ராவிற்கு ஆதரவாக பிரபல பாலிவுட் இயக்குநர் எதிர்ப்புக் குரல் கொடுத்துள்ளார்.
மும்பை: இண்டிகோ விமானத்தில் என்னால் பயணிக்க இயலாது என்று பிரபல ஸ்டான்ட் அப் காமெடியன் குணால் கம்ராவிற்கு ஆதரவாக பிரபல பாலிவுட் இயக்குநர் எதிர்ப்புக் குரல் கொடுத்துள்ளார்.
பிரபல ஸ்டான்ட் அப் காமெடியன் குணால் கம்ரா சில நாட்களுக்கு முன்னதாக மும்பையில் இருந்து லக்னௌவிற்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவருடன் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியரும், வலதுசாரி ஆதரவாளருமான அர்னாப் கோஸ்வாமியும் பயணித்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ ஒன்றை ட்விட்டரில் குணால் கம்ரா வெளியிட்டார். அதில், அர்னாப் கோஸ்வாமியிடம் குணால் பல கேள்விகளை கேட்டுள்ளார். அர்னாப் பதிலளிக்காமல் கண்டுகொள்ளாதது போல் இருக்க நீங்கள் கோழையா? இல்லை தேசியவாதியா? எனவும் பலவாறு குணால் கேள்வி எழுப்புகிறார்.
அந்த வீடியோ ட்விட்டரில் வைரலான நிலையில் இண்டிகோ நிறுவனம் குணால் கம்ராவிற்கு 6 மாதங்களுக்கு தங்களின் விமான சேவையில் பறக்க தடை விதித்தது. இண்டிகோவை போன்று, ஏர் இந்தியா, கோ ஏர் மற்றும் ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட நிறுவனங்களும் 6 மாதங்கள் வரை குணால் கம்ரா தங்களது விமானங்களில் பறப்பதற்கு தடை விதித்துள்ளது.
இந்த தடை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதை எதிர்த்து குணால் கம்ரா வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் இண்டிகோ விமானத்தில் என்னால் பயணிக்க இயலாது என்று பிரபல ஸ்டான்ட் அப் காமெடியன் குணால் கம்ராவிற்கு ஆதரவாக பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் எதிர்ப்புக் குரல் கொடுத்துள்ளார்.
அனுராக் காஷ்யப் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக திங்களன்று கொல்கத்தா வந்துள்ளார். அப்போது அவருக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இண்டிகோ விமானத்தில் டிக்கெட் பதிவு செய்துள்ளார்கள். இதுதொடர்பாக அவரிடம் தகவல் தெரிவித்த போது, 'நான் இண்டிகோ விமானத்தில் பயணிக்க இயலாது. குணால் கம்ராவிற்கு விதிக்கப்பட்ட தடை எனக்கு ஏற்புடையதல்ல; அது மிகவும் அநீதியானது என்று நான் கருதுகிறேன். அதுதொடர்பாக நான் செய்வதற்கு பெரிய அளவிற்கு எதுவும் இல்லை என்றாலும் எனது எதிர்ப்பை பதிவு செய்ய விரும்புகிறேன். எனவேதான் அவ்வாறு தெரிவித்தேன். அதற்குப் பதிலாக நான் விஸ்தாரா நிறுவன விமானத்தில் பயணிக்கும் நிலை. இதனால் நான் அதிகாலை 4 மணிக்கு எழுந்து கிளம்ப வேண்டும் என்று தெரிவித்தார்கள். ஆனாலும் நான் எனது முடிவில் உறுதியாக இருந்தேன்.
இவ்வாறு ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ள அனுராக், இதைத் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.