மகாத்மா காந்தி உங்களுக்கு டிரெய்லராக இருக்கலாம், ஆனால் அவர் எங்களுக்கு வாழ்க்கை என பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) உரையாற்றினார். அவர் தன்னுடைய உரையைத் தொடங்கும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காந்தி வாழ்க என்று கோஷம் எழுப்பினர். இதையடுத்து, மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதரி, "இது வெறும் டிரெய்லர்தான்" என்றார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, "உங்களுக்கு வேண்டுமானால் காந்தி டிரெய்லராக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அவர் வாழ்க்கை" என்றார்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தன்னுடைய உரையைத் தொடங்கினார்.
முன்னதாக, வி.டி. சாவர்க்கர் நினைவைப் போற்றும் வகையில், கர்நாடகத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே, மகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்டத்தை நாடகம் என்ற அர்த்தத்தில் குறிப்பிட்டு பேசினார். இவருடைய இந்தக் கருத்து மிகப் பெரிய சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து தான் காந்திக்கு எதிராக எதுவும் கூறவில்லை என்றும் அனந்த்குமார் ஹெக்டே தெரிவித்தார். இவருடைய இந்தக் கருத்துக்கு கட்சி ரீதியாக இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதேசமயம், இந்தக் கருத்துக்கு கட்சி மேலிடத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.