ரூ.2 லட்சம் லஞ்சம்: தில்லி துணை முதல்வரின் சிறப்புப் பணி அலுவலர் கைது
ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் சிறப்புப் பணி அலுவலர், சிபிஐ அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் சிறப்புப் பணி அலுவலர், சிபிஐ அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். தில்லி பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் நடைபெற்றுள்ள இந்த கைது நடவடிக்கை அங்கு பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் சிறப்புப் பணி அலுவலராக கோபால் கிருஷ்ண மாதவ், கடந்த 2015-ல் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், வரி ஏய்ப்பு விவகாரத்தை மூடி மறைக்க ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்றபோது சிபிஐ அதிகாரிகளால் கோபால் கிருஷ்ண மாதவ் கையும், களவுமாகப் பிடிபட்டார்.
இதையடுத்து சிபிஐ தலைமையிடத்தில் வைத்து கோபால் கிருஷ்ண மாதவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இவ்விவகாரத்தில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறுகையில்,
எனது சிறப்புப் பணி அலுவலராக கடந்த 5 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தவர் ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் சிபிஐ சரியான நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபோன்ற கடின நடவடிக்கைகள் தான் சிறந்த முன் உதாரணமாக இருக்க முடியும்.
யார் லஞ்சம் பெற்றாலும் நிச்சயம் கைது செய்யப்பட வேண்டும். லஞ்ச நடவடிக்கைகளை ஆம்ஆத்மி கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. தேர்தல் நேரத்தில் நடைபெற்றுள்ள இந்த கைது நடவடிக்கையால் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெரிவித்தார்.