நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியே தூக்கிலிட அனுமதி கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை பிப்.11ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் ஆகிய நால்வருக்கும் இருமுறை தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தேதிகள் அறிவிக்கப்பட்டு அவர்களது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதற்கு எதிராக மத்திய அரசு மற்றும் நிர்பயாவின் தாயார் தரப்புகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதில், மத்திய அரசு முதலில் தில்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், குற்றவாளிகள் நால்வரையும் தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பிப்.5ம் தேதி விசாரணை நடத்திய தில்லி உயர்நீதிமன்றம், 'நால்வரையும் தனித் தனியாக தூக்கிலிட அனுமதிக்க முடியாது என்றும், அவர்கள் நால்வரும் ஏழு நாட்களில் தங்களுக்கான சட்டத் தீர்வுகளை காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கெடு விதித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
இதற்கு எதிராக, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் அஷோக் பூஷண், ஏ.எஸ்.போபண்ணா அமர்வு முன்பாக நடைபெற்றது. விசாரணையில், தில்லி உயர்நீதிமன்றம் 7 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது. எனவே கால அவகாசம் முடியும் நாளான பிப்.11ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகக் கூறி வழக்கை அன்றைய தினத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.