ஜம்முவில் அடுக்குமாடிக் கட்டடம் தரைமட்டம்: தீயணைப்பு வீரர்கள் மூன்று பேர் பலி
ஜம்முவில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த மூன்று அடுக்குமாடிகளைக் கொண்ட கட்டடம், திடீரென இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 தீயணைப்பு வீரர்கள் பலியாகினர்.
ஜம்மு: ஜம்முவில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த மூன்று அடுக்குமாடிகளைக் கொண்ட கட்டடம், திடீரென இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 தீயணைப்பு வீரர்கள் பலியாகினர்.
இந்த சம்பவத்தில் 3 தீயணைப்பு வீரர்களை இழந்துவிட்டோம். பொதுமக்களில் 4 பேர், 2 தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர் என்று தீ மற்றும் அவசரகால சேவைகள் துறையின் பொது மேலாளர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்முவில் இன்று காலை மூன்று அடுக்குமாடிகளைக் கொண்ட கட்டடத்துக்குள் தீப்பிடித்தது. அதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்த போது திடீரென அந்தக் கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
கோல்புள்ளி பகுதியில் உள்ள கட்டடத்தின் தரை தளத்தில் இன்று காலை இந்த கொடூர விபத்து நேரிட்டது. எதிர்பாராத விதமாக கட்டடம் இடிந்து விழுந்ததில், தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 5 வீரர்கள் மற்றும் ஏராளமானோர் கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இவர்களில் இரண்டு வீரர்களும் பொதுமக்களும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டனர். மேலும் மூன்று தீயணைப்பு வீரர்களை மீட்கும் பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில், மூன்று தீயணைப்பு வீரர்களும் விபத்தில் பலியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து தீயணைப்புத்துறை சார்பல் கூறியிருப்பதாவது, இன்று காலை 4.48 மணிக்கு கட்டடத்தில் தீ விபத்து நேரிட்டதாக வந்த தகவலை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத வகையில் 5.30 மணியளவில் கட்டடம் இடிந்துவிழுந்து தரைமட்டமானது.
உடனடியாகக் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 3 தீயணைப்பு வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.