அவசரக்கால நடவடிக்கை: 21 மாநிலங்களில் மீண்டும் மண்ணெண்ணெய் விநியோகிக்க மத்திய அரசு அனுமதி
அடுத்த 60 நாள்களுக்கு 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரசேதங்களில் நியாய விலைக்கடைகள் மூலம் மீண்டும் மண்ணெண்ணெய் விநியோகிக்க அனுமதி குறித்து...
எரிசக்தித் தட்டுப்பாட்டை தவிர்க்க, அவசரக்கால நடவடிக்கையாக அடுத்த 60 நாள்களுக்கு 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரசேதங்களில் நியாய விலைக்கடைகள் மூலம் மீண்டும் மண்ணெண்ணெய் விநியோகிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வீடுகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகத்தை எளிதாக்குவதற்காக, மத்திய அரசு பெட்ரோலியப் பாதுகாப்பு மற்றும் உரிம விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளது.
மார்ச் 29 ஆம் தேதி மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி,
மண்ணெண்ணெய் பயன்பாடே இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்ட தில்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சமையல் மற்றும் விளக்கு எரிப்பதற்காக பொதுவிநியோக திட்டத்தில் நியாய விலைக்கடைகள் மூலம் மீண்டும் மண்ணெண்ணெயை விநியோகிக்க உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, பொதுமக்களின் தேவைக்கேற்ப எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய வழிவகை செய்துள்ளது.
60 நாள்களுக்கு அல்லது மறு அறிவிப்பு வரும் வரை, பெட்ரோல் நிலையங்கள் மூலம் மண்ணெண்ணெய் விற்பனை செய்வதற்கு எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கான விதிமுறைகளில் தற்காலிக தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தத் தளர்வுகளின் ஒரு பகுதியாக, பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களால் இயக்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களில் அதிகபட்சமாக 2,500 லிட்டர், மாநில அரசுகளால் தேர்வு செய்யும் மாவட்டத்திற்கு 2 பெட்ரோல் நிலையங்களில் 5,000 லிட்டர் வரை மண்ணெண்ணெயை சேமித்து வைக்க அனுமதிக்கப்படும்.
மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களால் அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட விற்பனை நிலையங்களுக்கு மட்டுமே இந்த விநியோகம் அனுமதிக்கப்படும்.
மேலும், சமையல் மற்றும் விளக்கு ஏற்றுதல் போன்ற வீட்டு உபயோகத்திற்கு மட்டுமே இது வழங்கப்படும் என்றும், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.