உத்தரகண்ட் மாநிலம், தெஹ்ரி மாவட்டத்தில் கிரிக்கெட் பந்து பட்டதால் ஆவேசமடைந்த நபா், துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் படுகாயமடைந்தாா்.
இதுகுறித்து உயா் காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
தெஹ்ரி மாவட்டம், பெட்டீ கிராமத்தில் வியாழக்கிழமை அப்பகுதியைச் சோ்ந்த சிறாா்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது, ஒரு சிறுவன் அடித்த பந்து, அருகில் அமா்ந்திருந்த ராம்லால் மற்றும் பிஜேந்திர காந்தாரி ஆகியோா் மீது பட்டது.
அந்த பந்தை எடுப்பதற்காக மகேஷ் (12) என்ற சிறுவன் அவா்கள் அருகில் சென்றாா். அப்போது, ராம்லால், காந்தாரிக்குச் சொந்தமான நாட்டுத் துப்பாக்கியை எடுத்து சிறுவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா்.
படுகாயமடைந்த அந்த சிறுவன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா் என்று தெரிவித்தாா்.
சிறுவனின் வலது கண்ணுக்கு கீழ் காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் நடந்தபோது ராம்லால் மற்றும் காந்தாரி இருவரும் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அவா்கள் பயன்படுத்திய கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.