லாவி யாதவ் (24), என்பவர் வேலை கிடைக்காத விரக்தியில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இவர் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர் ஆவார்.
ஞாயிற்றுக்கிழமை அன்று தனது வீட்டில் துப்பட்டாவால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை முதல் வீட்டினருடன் லாவி யாதவ் பேசவில்லை என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவரது மொபைல் அணைக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்களாக இருந்துள்ளது.
தற்போது அவரது மொபைல் மீட்கப்பட்டது, ஆனால் தற்கொலைக் குறிப்பு எதுவும் போலீஸாரால் கண்டுபிடிக்கப்படவில்லை.
பிஹாரிபூர் சிவில் லைன்ஸில் வசிப்பவர் லாவி யாதவ் ஆர்.பி. டிகிரி கல்லூரியில் உடற்கல்வியில் இளங்கலை படித்துள்ளார். தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரரான அவர் பரேலியில் வசித்து வந்தார்.
அவரது குடும்பம் லாவி யாதவின் சொந்த கிராமத்தில் வசித்து வந்தது. தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளுக்கு அவர் பதிலளிக்காத நிலையில், பதற்றமடைந்த அவருடைய தந்தையும், சகோதரனும் அவரை நேரில் சந்திக்க கிளம்பி வந்தனர். வீட்டுக் கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.
அவரது தந்தை ஷிஷுபால் உடனே போலீஸாருக்குத் தகவல் அளித்தார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்தபோது, லாவி யாதவ் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று இன்ஸ்பெக்டர் கீதேஷ் கபில் தெரிவித்தார்.
லாவி யாதவ் தனக்கு வேலை கிடைக்காததால் வருத்தமடைந்துள்ளதாகவும், அவரது தனித் திறனும் அவருக்கு எவ்வித பயனும் தரவில்லை என்றும் அவரது தந்தை ஷிஷுபால் போலீஸாரிடம் தெரிவித்தார்.