குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான பேச்சு: ஜே.என்.யு மாணவர் சர்ஜீல் இமாமிற்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் பேசிய வழக்கில் ஜே.என்.யு மாணவர் சர்ஜீல் இமாமிற்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
புது தில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் பேசிய வழக்கில் ஜே.என்.யு மாணவர் சர்ஜீல் இமாமிற்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
பிகார் மாநிலம் ஜெகனாபாத்தைச் சேர்ந்தவர் சர்ஜீல் இமாம். இவர் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருக்கிறார். இவர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனால் இவர்மீது அலிகார் காவல் நிலையத்தில் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட் டிருந்தது.
இதே கருத்தை அவர் சமூக வலைதளத்திலும் எழுதினார். இதையடுத்து, இது வைரலாகப் பரவியது. இதையடுத்து இவர் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அசாமில் இவர் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் (ஊபா) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், பிகார் மாநிலம் ஜெகனாபாத்தில் உள்ள சர்ஜீல் இமாம் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, தில்லிக்கு அழைத்து வரப்பட்டார்.
Advertisement
இதையடுத்து அவருக்கு முதலில் 5 நாட்களும், பின்னர் காவல்துறையினரின் கோரிக்கையின் பேரில் 3 நாள்களுக்கும் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவரது பேச்சின் மூலம் மாணவர்களை போராட்டத்திற்குத் திரட்டினாரா என்பது குறித்து விசாரிப்பதற்காக திங்கள் ஒரு நாள் மட்டும் அவர் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில் போலீஸ் காவல் முடிந்து செவ்வாயன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.