பனாஜி: கோவா மாநில பாடப்புத்தகங்களில் மன்னர் சத்ரபதி சிவாஜி குறித்து வெளிவந்துள்ள தகவல்களுக்கு அங்குள்ள ஹிந்து அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவா மாநில கல்வித்துறை சார்பாக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள 'கோவா மாநில வரலாறு' என்னும் பாடப்புத்தக இணைப்பில் மன்னர் சிவாஜி கோவாவில் உள்ள பர்தேஷ் கோட்டையை மூன்று நாட்கள் முற்றுகை இட்டதாவும், அப்போது அவர் கிராமங்களை கொள்ளையடித்து அவற்றிற்கு நெருப்பு வைத்ததாகவும் , அங்குள்ள பெண்கள் மற்றும் குழநதைகளை தீயிலிட்டு கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அங்குள்ள ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக 'ஹிந்து ஜனாஜக்ருதி சமிதி' என்னும் அமைப்பு இந்த விவகாரத்தில் கோவா மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் மனோஜ் சோலங்கி புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நமது தாய்நாட்டைச் சேர்ந்த சிவாஜி போன்ற மகத்தான மன்னர்களைக் குறித்த இத்தகைய திரிக்கப்பட்ட வரலாறுகளை எந்த ஒரு ஹிந்துவும் சகித்துக் கொள்ள முடியாது. கோவா மாநில அரசு அந்த வரலாற்றுப் புத்தகத்தை உடனே திரும்பப் பெறவில்லை என்றால் 'ஷிவ்பிரேமிஸ்' எனபப்டும் சிவாஜி பக்தர்கள் தெருக்களில் இறங்கிப் போராடுவார்கள்' என்று தெரிவித்துள்ளார்.