அவிநாசி பேருந்து விபத்தில் பலியானோரின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரள மாநில சாலை போக்குவரத்து துறைக்குச் சொந்தமான சொகுசு பேருந்து கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரளம் மாநிலம் எர்ணாகுளம் நோக்கி புதன்கிழமை இரவு 8 மணி அளவில் புறப்பட்டது. இந்தப் பேருந்தில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 25 பேரும், பாலக்காட்டைச் சேர்ந்த 4 பேர், திருச்சூரைச் சேர்ந்த 19 பேர் எனமொத்தம் 48 பேர் பயணம் செய்தனர்.
இந்தப் பேருந்தானது திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே புறவழிச்சாலையில் அதிகாலை 3.15 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது கோவையில் இருந்து சேலம் நோக்கி 50 டன் எடைகொண்ட டைஸ்ஸ் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், அதிகாலை நேரமாக இருந்ததால் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் கண் அயர்ந்ததாகத் தெரிகிறது.
இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலை மையத்தடுப்பையும் தாண்டி பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே 14 பேரும், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் 6 பேர் என மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில், 6 பெண்களும் அடங்குவர். விபத்தில் காயமடைந்தவர்களை 24 பேர் கோவை, அவிநாசி, திருப்பூர் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மற்ற 5 பயணிகள் லேசான காயமடைந்ததாகவும் தெரிகிறது. இதனிடையே விபத்தில் பலியானோரின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில், தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்து மிகுந்த வேதனையை அளிக்கிறது. இந்த சோகமான தருணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்கிறேன். மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெறுவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.