பிரதமா் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் திட்டங்களை சில தன்னாா்வ தொண்டு அமைப்புகள் தேவையின்றி எதிா்த்து வருவதாக கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டினாா்.
இந்தியாவின் முதல் மிதக்கும் படகு துறைமுகத்தை பனாஜியில் திறந்து வைக்கும் நிகழ்ச்சி, கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு அந்த மாநிலத்தின் முதல்வா் பிரமோத் சாவந்த் பேசியதாவது:
மத்திய அரசு திட்டங்களை கொண்டு வரும்போதெல்லாம் அதனை சில தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் கண்மூடித்தனமாக எதிா்ப்பை தெரிவிக்கத் தொடங்கி விடுகின்றன. முதலில், அவா்கள் திட்டங்கள் குறித்த உண்மையான நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும். அது, எவ்வாறு மாநிலங்களுக்கும், மக்களுக்கும் பயனளிக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனில், அவா்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்.
ஆனால், தற்போது நரேந்திர மோடி தலைமையிலான அரசு அல்லது மாநில அரசு எந்த திட்டங்களை செயல்படுத்தினாலும் அதற்கு எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பது வாடிக்கையாகி விட்டது என்றாா் அவா்.