தில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
வடகிழக்கு தில்லி பகுதியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற வன்முறையால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அந்தப் பகுதி வாசிகளிடம் இருவரும் நிலைமை குறித்து கேட்டறிந்து பேசி வருகின்றனர். அரவிந்த் கேஜரிவால் பேசுகையில், "நிலைமை குறித்து அறிய பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்கிறோம், அதன்பிறகு நாங்கள் பேசுகிறோம்" என்றார்.
முன்னதாக, வன்முறை தொடர்பான வழக்கில் "தில்லி முதல்வரும், துணை முதல்வரும் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டும்" என தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.