குருகிராம்: தில்லி வன்முறைச் சம்பவங்கள் ஓரளவு காட்டுக்கு வந்திருக்கும் தருணத்தில் தில்லியின் அண்டை மாநிலமான ஹரியானாவின் குருகிராமில் ஹிந்து சேனா அமைப்பின் சார்பில் நடத்தப்பட்டுள்ள ஊர்வலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புது தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வெள்ளி மாலை துவங்கி நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் இதுவரை 33 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஹரியானாவின் குருகிராமில் ஹிந்து சேனா அமைப்பின் சார்பில் நடத்தப்பட்டுள்ள ஊர்வலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்து சேனா அமைப்பைக் சேர்ந்த சுமார் 50 பேர் புதனன்று ஊர்வலமாக குருத்வாரா சாலை, சதார் பஜார் வழியாக மாவட்ட காவல்துறை இணை ஆணையர் அலுவலகத்தை அடைந்தனர்.
ஊர்வலத்தின் போது, 'தேசத் துரோகிகளை நிற்க வைத்து சுட்டுக் கொல்லுங்கள்' உள்ளிட்ட கோஷங்களை அவர்கள் எழுப்பினர். அவர்கள் செல்லும் பாதையில் காவல்துறையினர் இருந்த போதிலும் யாரும் அவர்களைத் தடுக்கும் விதமாக எதுவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக காவல்துறை இணை ஆணையரிடம் அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில், அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு சொத்துக்களை சேதப்படுத்துபவர்களிடம் கடுமையான அபராதம் வசூலிக்கப் பட வேண்டுமென்று தெரிவித்துள்ளனர்.