லடாக்கில் 5 புதிய மாவட்டங்களுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல்!
லடாக் யூனியன் பிரதேசத்தில் புதிய மாவட்டங்கள் பற்றி..
லடாக் யூனியன் பிரதேசத்தில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்குத் துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட 2019 வரை, அம்மாநிலத்தின் ஒரு பகுதியாக லடாக் இருந்தது. சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பின் ஐம்மு-காஷ்மீர், லடாக் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. முன்னதாக, லடாக்கில் லே மற்றும் கார்கில் என இரண்டு மாவட்டங்கள் இருந்தன. இந்த நிலையில், லடாக்கில் புதிதாக ஐந்து மாவட்டங்களை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
Advertisement
லடாக் மக்களின் விருப்பங்களையும், நீண்டகால கோரிக்கையையும் நிறைவேற்றும் வகையில், லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நூப்ரா, ஷாம், சன்ஸ்கர், திராஸ், சாங்தாங் ஆகிய ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதன் மூலம், லடாக்கில் இனி ஏழு மாவட்டங்கள் இருக்கும், இதன் மூலம் யூனியன் பிரதேசத்தில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை ஏழாக உயரும்.
பரப்பளவின் அடிப்படையில் லடாக் இந்தியாவின் மிகப்பெரிய யூனியன் பிரதேசமாக இருந்தாலும், மக்கள் தொகை அடிப்படையில் இரண்டாவது மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட பிரதேசமாக உள்ளது.
சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை எல்லையாகக் கொண்டுள்ள லடாக், 86,904 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு 2.74 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
இந்த வளர்ச்சி நடவடிக்கை, 'வளர்ச்சியடைந்த மற்றும் செழிப்பான லடாக்' பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் முழுமையாக ஒத்துப்போகிறது என சக்சேனா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.