முகப்பு
இந்தியா

குடியரசுத் தலைவருடன் சோனியா சந்திப்பு: உள்துறை அமைச்சரை நீக்கக்கோரி காங்கிரஸ் மனு

தில்லியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்து இன்று (வியாழக்கிழமை) மனு அளித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:00 PM
பகிர்:


தில்லியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்து இன்று (வியாழக்கிழமை) மனு அளித்தார்.

வடகிழக்கு தில்லி பகுதியில் கடந்த நான்கு நாட்களாக நிகழ்ந்த வன்முறையால் இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மன்மோகன் சிங், அகமது படேல், மல்லிகார்ஜுன் கார்கே, குலாம் நபி ஆசாத், ஏகே அந்தோணி, பிரியங்கா காந்தி மற்றும் சிலருடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்தார்.

அப்போது தில்லி வன்முறை தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை சோனியா காந்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் அளித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு பேசிய சோனியா காந்தி,

"மத்திய அரசும், தில்லி அரசும் வன்முறையின்போது வெறும் பார்வையாளர்களாகவே இருந்துள்ளனர். எங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் அளித்துள்ளோம். இந்த வன்முறை 34 பேரை பலி கொண்டுள்ளது. தொழில்களும், சொத்துகளும் சூறையாடப்பட்டுள்ளன. கடமையைச் செய்யத் தவறியதால் அமித் ஷாவை மத்திய உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

எங்களது கோரிக்கைகளை கவனத்தில் எடுத்துக்கொள்வதாக குடியரசுத் தலைவர் கூறினார். எங்களுக்கு இது திருப்தியளிக்கும் வகையில் இருக்கிறது" என்றார்.

முன்னதாக, தில்லி வன்முறை குறித்து நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சோனியா காந்தி,

"மத்திய அரசு கடமை தவறியதே, தில்லியின் தற்போதைய நிலைமைக்கு காரணமாகும். அதற்கான முழு பொறுப்பையும் மத்திய அரசு ஏற்க வேண்டும். குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும்" என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →