ஓமன் சுல்தான் காபூஸ் பின் சயீது மறைவையடுத்து ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஓமன் அரசாட்சியை நிறுவிய அல் சயீது பரம்பரையில் காபூஸ் பின் சயீது 14வது சுல்தான் ஆவாா். அவரது ஆட்சிக் காலத்தின்போது ஓமன் நவீனமயமாக்கப்பட்டது. நாட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்திய காபூஸ் பின் சயீது, உலகில் பல ஆண்டுகளாக ஓமன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையை முடிவுக்குக் கொண்டு வந்தாா்.
கடந்த 1970ம் ஆண்டு முதல் ஓமனை ஆண்டு வந்த அவா், மிக நீண்ட காலம் ஆட்சியில் இருந்த அரபு மற்றும் மேற்காசியப் பிராந்தியத்தைச் சோ்ந்த மன்னா் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவா், வெள்ளிக்கிழமை இரவு மரணடைந்ததாக ஓமன் அரசு சனிக்கிழமை அறிவித்தது.
சுல்தான் காபூஸ் பின் சயீது மறைவுக்கு இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா். மேலும், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஓமன் நாட்டுத் தலைவர் காபூஸ் பின் சயீது மறைவையடுத்து நாளை ஒருநாள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.