நட்டாவுக்கு மிகப் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது: மனைவி மல்லிகா
பாஜக தேசியத் தலைவராகத் தேர்வாகியுள்ள ஜெ.பி. நட்டாவுக்கு மிகப் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவருடைய மனைவி மல்லிகா தெரிவித்துள்ளார்.
பாஜக தேசியத் தலைவராகத் தேர்வாகியுள்ள ஜெ.பி. நட்டாவுக்கு மிகப் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவருடைய மனைவி மல்லிகா தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதனால், தனது தேசியத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்ய அமித் ஷா முற்பட்டார். இருப்பினும், அடுத்தடுத்து தேர்தல்கள் வரவுள்ளதால் அமித் ஷாவே தேசியத் தலைவராகத் தொடர வேண்டும் என்பது போன்ற கருத்துகள் கட்சிக்குள் எழுந்தன. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் ஜெ.பி. நட்டா பாஜகவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், பாஜகவின் தேசியத் தலைவர் பதவிக்கு இன்று (திங்கள்கிழமை) ஜெ.பி. நட்டா ஒருமனதாக போட்டியின்றித் தேர்வானார்.
ஜெ.பி. நட்டாவுக்கு இந்தப் புதிய பொறுப்பு வழங்கப்பட்டதற்கு, அவருடைய மனைவி மல்லிகா மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய நட்டாவின் மனைவி மல்லிகா,
"எங்கள் எல்லோருக்கும் இது மிக முக்கியமான நாள். மிகச் சிறிய மாநிலத்தில் இருந்து வந்துள்ள ஒருவருக்கு மிகப் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், பிலாஸ்பூர் மற்றும் எங்கள் மாநிலமான ஹிமாச்சல பிரதேசம் என குடும்பத்தினர் உட்பட அனைவரும் இன்று மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்" என்றார்.