அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, 7 பேர் காயம்
அமெரிக்காவின் சியாட்டிலி நகரில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
வாஷிங்டன்: அமெரிக்காவின் சியாட்டிலி நகரில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். ஏழு பேர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் பரபரப்பான நகரம் என்று அழைக்கப்படும் சியாட்டிலி நகரில் நேற்று திடீரென மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 9 வயது சிறுவன் உள்பட 7 பேர் பலத்த காயமடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அப்பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்குள் நடந்த மூன்றாவது துப்பாக்கிச்சூடு இதுவாகும். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள பள்ளி, தேவாலயம், சினிமா தியேட்டர்கள் மற்றும் பொது இடங்களுக்கு வரும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதுவரை மக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள் தங்கி இருக்கவும், அங்குள்ள சுரங்கப்பாதை நிலையத்தை மூடவும் போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் தற்கொலை, கொலை, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களால் சுமார் 40,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அமெரிக்காவின் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.