கூடை நிறைய வெட்டுக்கிளிகளுடன் சட்டப்பேரவைக்கு வந்த எம்.எல்.ஏ!
கூடை நிறைய வெட்டுக்கிளிகளுடன் ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வந்த பாஜக எம்.எல்.ஏவால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெய்ப்பூர்: கூடை நிறைய வெட்டுக்கிளிகளுடன் ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வந்த பாஜக எம்.எல்.ஏவால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகளின் பாதிப்பு அதிகரித்துக் காணபப்டுகிறது. குறிப்பாக மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் மேற்குப் பகுத்தியில் உள்ள 11 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து விவசாய நிலங்களுக்கு படை எடுக்கும் வெட்டுக்கிளிகள் பயிர்களை அழித்து கடுமையான சேதத்தை உண்டாக்குகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் பெரும் பொருள் சேதத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.
இந்நிலையில் கூடை நிறைய வெட்டுக்கிளிகளுடன் ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வந்த பாஜக எம்.எல்.ஏவால் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளியன்று பாஜக எம்.எல்.ஏவாவான பிஹாரி சிங் அலங்கரிக்கப்பட்ட கூடை ஒன்றுடன் சட்டப்பேரவைக்கு வந்தார்.
முதலில் அவர் கையில் இருப்பது ஏதோ பரிசுப் பொருள் என்று அனைவரும் எண்ணியிருந்தார்கள். ஆனால் அவர் கூடையைத் திறந்ததும் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'விவசாயிகள் கடுமையான இழப்பிற்கு உள்ளாகி சிரமப்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த அரசோ, குடியுரிமை திருத்தச் சட்டத்தில் அதிக அக்கறை காட்டி செயல்பட்டு வருகிறது. எனவே அரசு உடனடியாக விரைந்து செயல்பட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும என்று தெரிவித்தார்.