தில்லி மக்களுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக கடுமையாக உழைத்து வரும் தன்னை பாஜகவினர் பயங்கரவாதி என்று கூறியது வருத்தமளிக்கிறது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லியில் வருகிற பிப்ரவரி 8ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அனைத்துக் கட்சித் தலைவர்களும் போட்டிபோட்டுக்கொண்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா, முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை பயங்கரவாதி என விமர்சித்ததாக செய்தி வெளியானது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தன்னை பயங்கரவாதி என பாஜக கூறியது வேதனையளிக்கிறது என கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தில்லி மக்களுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக இரவும் பகலும் கடினமாக உழைத்துள்ளேன். அரசியலுக்கு வந்த பிறகு பல்வேறு இடர்ப்டுகளை சந்தித்திருக்கிறேன். மக்களுக்காக நிறைய தியாகம்செய்துள்ளேன். ஆனால், பாஜகவினர் என்னை பயங்கரவாதி என்று அழைப்பது வருத்தமாக இருக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.