ஆந்திரம்: பிணவறையில் மனிதக் கண்களைத் தின்று தீர்த்த எலிகள்
ஆந்திர மாநிலம் எலுரு அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மனித உடலில் இருந்த கண்களை எலிகள் தின்ற கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
எலுரு: ஆந்திர மாநிலம் எலுரு அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மனித உடலில் இருந்த கண்களை எலிகள் தின்ற கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
துரதிருஷ்டவசமாக இந்த சம்பவம் நடந்த பகுதி மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கிருஷ்ண ஸ்ரீனிவாஸின் தொகுதிக்குட்பட்டதாக உள்ளது.
எலுரு மாவட்டத்தைச் சேர்ந்த வைகுந்த வாசு செவ்வாய்க்கிழமை டிராக்டர் மோதி பலியானார். இவரது உடல் எலுரு அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
Advertisement
புதன்கிழமை காலை அவரது உடலை வாங்க வந்த உறவினர்கள், வைகுந்த வாசுவின் கண்கள் மற்றும் கண் இமைகளை எலிகள் கடித்துத் தின்றிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை சமாதானம் செய்த ஊழியர்கள் உடலை கொடுத்து அனுப்பினர்.
இதேப் போன்ற சம்பவம் கடந்த வாரமும் நிகழ்ந்துள்ளது. கடந்த வாரம் பிரேத பரிசோதனைக்கு வந்த செட்டி ஸ்ரீராம மூர்த்தியின் கண்களையும் எலிகள் கடித்துத் தின்ற கொடூரம் நடந்துள்ளது.
இது பற்றி ஊழியர்களிடம் கேட்டால், ஃப்ரீஸர்கள் வேலை செய்யாததால்தான் இந்த நிலை ஏற்படுவதாகவும், 6 ஃப்ரீஸர்களில் ஒன்று மட்டுமே வேலை செய்வதாகவும் கூறுகிறார்கள்.
ஆனால், பிணவறை முழுக்க குப்பை மேடாக இருப்பதாகவும் சுத்தமாக வைத்திருக்காததே இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணம் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.