ஆன்லைன் வகுப்புகளுக்காக மகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்கித் தர இயலாத தந்தை தற்கொலை!
ஆன்லைன் வகுப்புகளுக்காக மகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்கித் தர இயலாத தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரிபுரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
அகர்தலா: ஆன்லைன் வகுப்புகளுக்காக மகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்கித் தர இயலாத தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரிபுரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து திரிபுராவின் செபஹிஜலா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்னேந்து சக்ரபோர்த்தி செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
மேற்கு திரிபுராவின் செபஹிஜலா மாவட்டத்தில் உள்ள மதுபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமார் பவுமிக் (45). இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழநதைகள் உள்ளனர். தினக்கூலி வேலை செய்து வந்த அவருக்கு, தற்போது கரோனா காரணமாக வருவாய் வெகுவாக குறைந்து விட்டது. கிடைக்கின்ற சொற்ப பணத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
Advertisement
இந்நிலையில் 15 வயதான அவரது மூத்த மகள் பள்ளி நடத்தும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக தனக்கு ஸ்மார்ட்போன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் சுகுமார் விலை குறைவான சாதாரண போன் ஒன்றை வாங்கி வந்துள்ளார். ஆனால் அவரது மகள் அதனை ஏற்க மறுத்துள்ளார். அத்துடன் அவரது மனைவியும் மகளும் சேர்ந்து அவரை கடுமையாகத் திட்டியுள்ளனர். உச்சகட்டமாக அவரது மகள் அவர் வாங்கி வந்த போனை தரையில் அடித்து உடைத்துள்ளார்.
இப்படியான தொடர் அவமானங்களினால் மனமுடைந்த சுகுமார் தனது வீட்டில் உள்ள அறை ஒன்றில் வியாழனன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.