புது தில்லி: மத்திய பிரதேச மாநிலத்தில் விளைவிக்கப்படும் பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் திங்கள்கிழமை சந்தித்து வலியுறுத்தினார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள முரைனா, பிண்ட், குவாலியர், ஷியோபுர், ததியா, சிவபுரி, குனா, விதிஷா, ராய்சென், சீஹோர், ஹோஷங்காபாத், ஜபல்பூர், நரசிங்கபூர் ஆகிய 13 மாவட்டங்களில் சுமார் 80,000 விவசாயிகள் பாசுமதி சாகுபடி செய்கின்றனர்.
வரலாற்று ஆதாரங்களின்படி மத்திய பிரதேச மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் பாசுமதி அரிசிக்குப் புவிசார் குறியீடு வழங்குவது பொருத்தமாக இருக்கும். அவ்வாறு வழங்கப்பட்டால் அது மாநில விவசாயிகளை ஊக்கப்படுத்துவதாக அமையும்.
மத்திய பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் பாசுமதி அரிசி பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.3,000 கோடி அந்நிய செலாவணி ஈட்டப்படுகிறது. புவிசார் குறியீடு மறுக்கப்பட்டால் அது மேற்கண்ட 13 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களுக்கு மிகப்பெரும் அநீதி இழைத்ததாகிவிடும் என அமைச்சருடனான சந்திப்பின்போது சௌஹான் தெரிவித்துள்ளார்.
இந்தக் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என அமைச்சர் தோமர், முதல்வரிடம் உறுதி அளித்துள்ளதாக மத்திய பிரதேச அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோரையும் சிவராஜ் சிங் சௌஹான் சந்தித்தார்.
கடந்த மார்ச் மாதத்தில் 4ஆவது முறையாக மத்திய பிரதேச முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவரை சௌஹான் சந்திப்பது இதுவே முதல் முறை.
குடியரசுத் தலைவருடனான சந்திப்பின்போது, மாநிலத்தில் கரோனா தொற்று பாதிப்பு நிலவரம், அண்டை மாநிலங்களுடனான பிரச்னைகள் குறித்து முதல்வர் விளக்கிக் கூறினார். குடியரசு துணைத் தலைவருடனான சந்திப்பின்போது, கோதுமை கொள்முதலில் மாநில அரசின் சாதனை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் தனது அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சௌஹான் எடுத்துரைத்தார்.
மத்திய பிரதேச மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள "உம்மீத்' (எதிர்பார்ப்பு), "மத்திய பிரதேஷ் விகாஸ் கே பிரதிபத் பிரயாஸ்' (மத்திய பிரதேச வளர்ச்சிக்கான உறுதியான முயற்சி) ஆகிய இரண்டு புத்தகங்களை ராம்நாத் கோவிந்த், வெங்கய்ய நாயுடு ஆகியோரிடம் சௌஹான் வழங்கினார்.