மும்பை தாராவியில் கட்டுப்படுத்தப்பட்ட கரோனா: உலக சுகாதார அமைப்பு பாராட்டு
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்திய நடவடிக்கைக்கு உலக சுகாதார அமைப்பு தனது பாராட்டைத் தெரிவித்துள்ளது.
ஜெனீவா: ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்திய நடவடிக்கைக்கு உலக சுகாதார அமைப்பு தனது பாராட்டைத் தெரிவித்துள்ளது.
மக்கள் தொகை நெருக்கம் அதிகம் மிகுந்த தாராவியில், எடுக்கப்பட்ட மிகத் தீவிரமான, ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையே தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மிகப்பெரும் உதவியாக இருந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திய பல இடங்களில், மிகச் சிறப்பான நடவடிக்கையால் அது மீண்டும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட உதாரணங்கள் உலகில் பல உள்ளன என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
Advertisement
இதையும் படிக்கலாம்.. ராயபுரத்தில் கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1500க்கும் கீழ் குறைந்தது
இதுபோன்ற உதாரணங்கள் இத்தாலி, ஸ்பெயின், தென் கொரியா, தாராவி போன்ற இடங்களில் நடந்துள்ளது. மக்கள் தொகை அதிகம் நிறைந்த பகுதியான மும்பை போன்ற மிகப்பெரிய நகரில், அங்குள்ள நிலைமையை நன்கு கவனித்து, பரிசோதனையை அதிகரித்து, கரோனா பாதித்தவர்களைக் கண்டறிந்து, தனிமைப்படுத்துவது, சிகிச்சை அளிப்பது போன்றவற்றை முறையாகக் கையாண்டு, கரோனா நோயாளியிடம் இருந்து மற்றவர்களுக்கு அந்தத் தொற்றுப் பரவாமல் தடுத்து, கரோனா பாதிப்பை குறைத்திருக்கிறார்கள் என்றும் டெட்ரோஸ் கூறியுள்ளார்.