இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5.15 லட்சம் கரோனா பரிசோதனை: ஐசிஎம்ஆர்
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 5.15 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 5.15 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூலை 26-ல் மட்டும் 5,15,472 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கரோனா பரவத் தொடங்கியதிலிருந்து இதுவரை 1,68,06,803 கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.
மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கரோனா பரிசோதனைக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது. தொற்று மேலும் பரவாமல் இருக்க ஒரே வழி தொடர் சோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சையளிப்பது தான் என்று கூறியுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 708 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 32,771 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 49,931 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், இதுவரை 14,35,453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.