பி.எம். கேர்ஸ் நிதியம் தொடர்பான வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்!
பி.எம். கேர்ஸ் நிதியத்திற்கு அளிக்கப்படும் நிதிக்கொடைகளை தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்திற்கு மாற்றக் கோரிய வழக்குத் தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
புது தில்லி: பி.எம். கேர்ஸ் நிதியத்திற்கு அளிக்கப்படும் நிதிக்கொடைகளை தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்திற்கு மாற்றக் கோரிய வழக்குத் தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
பொதுநல வழக்கு மையம் என்னும் அரசு சாரா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த இந்த வழக்கில், கரோனா பெருந்தொற்று காலத்தில் பி.எம். கேர்ஸ் நிதியத்திற்கு அளிக்கப்படும் நிதிக்கொடைகளை தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்திற்கு மாற்றக் கோரியும், அதற்காக பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் தேசிய அளவில் செயல்திட்டம் வகுக்கவும் உத்தரவிட கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கினை நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், மனுதாரர் சார்பாக பிரபல வழக்கறிஞர் துஷ்யந்த் தவேவும் ஆஜராகினர்.
இதுதொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்த நிலையில் துஷ்யந்த் தவே தன்னுடைய வாதத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை நிதியம் என்பது மத்திய கணக்குத் தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்படுவது என்றும், ஆனால் பி.எம். கேர்ஸ் நிதி என்பது அவ்வாறு இல்லாமல் தனியார் தணிக்கையாளரால் கையாளப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்,
இதை மறுத்த துஷார் மேத்தா பி.எம். கேர்ஸ் நிதி என்பது பொதுநல அறக்கட்டளை என்றும், அதன் காரணமாகவே வெளியில் இருந்து நிதிகள் பெறப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இருவரையுமே மூன்று பக்க அளவில் எழுத்துப் பூர்வ இறுதிக் கட்ட தொகுப்பு வாதங்களை தாக்கல் செய்யப் பணித்த நீதிபதி அசோக் பூஷன், தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.