உத்தரப்பிரதேசத்தில் தமிழகத்தை தோற்கடிக்கும் வேகத்தில் கரோனா பரிசோதனை
20 லட்சம் கரோனா பரிசோதனைகளை மேற்கொண்ட மாநிலமாக தமிழகத்தைத் தொடர்ந்து இரண்டாவது மாநிலமாக உத்தரப்பிரதேசம் இடம்பிடித்துள்ளது.
நாட்டிலேயே 20 லட்சம் கரோனா பரிசோதனைகளை மேற்கொண்ட மாநிலமாகத் திகழ்கிறது தமிழகம். இதுநாள்வரை தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இரண்டாவது மாநிலமாக இருக்க வேண்டிய மகாராஷ்டிரத்தில் தற்போது வரை 19 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால், நாள்தோறும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் என்ற இலக்கை நோக்கி கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தியிருக்கும் உத்தரப்பிரதேசம், நாட்டிலேயே 20 லட்சம் கரோனா பரிசோதனையை மேற்கொண்ட இரண்டாவது மாநிலமாக உருவாகியுள்ளது.
நாட்டிலேயே தமிழகம்தான் அதிகபட்ச கரோனா மாதிரி பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. இங்கு ஆரம்பம் முதலே கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டாலும் நாள் ஒன்றுக்கு 65 ஆயிரம் மாதிரிகள்தான் பரிசோதிக்கப்படுகிறது. ஆனால், உத்தரப்பிரதேசம்தான் நாட்டிலேயே நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேச முதல்வரின் செயலாளர் அலோக் குமார் வெளியிட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
இது குறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, உத்தரப்பிரதேசத்தில் நேற்று ஒரே நாளில் 91,830 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தி, நாட்டிலேயே 20 லட்சம் கரோனா பரிசோதனைகளை மேற்கொண்ட தமிழகத்துக்கு அடுத்தபடியாக, உத்தரப்பிரதேசம் இடம்பிடித்துள்ளது என்று கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் இன்று காலை நிலவரப்படி 26,204 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.