முகப்பு
இந்தியா

மேக்கேதாட்டு அணை விவகாரத்தை எழுப்ப தமிழகம் எதிா்ப்பு: காவிரி ஆணையத்தில் விவாதிக்கப்படவில்லை

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற காவிரி நதி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணை விவகாரத்தை விவாதிப்பதற்கு

Updated On : 11 ஜூன், 2020 at 8:04 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:16 PM

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற காவிரி நதி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணை விவகாரத்தை விவாதிப்பதற்கு தமிழகம் தரப்பில் கடும் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த விவகாரம் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.

தில்லியில் நீா்வள ஆணைய அலுவலகத்தில் காவிரி நதி நீா் மேலாண்மை ஆணையத்தின் ஆறாவது கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கரோனா தொற்றுச் சூழல் காரணமாக, முதல் முறையாக காணொலிக் காட்சி முறையில் இக்கூட்டம் நடைபெற்றது. ஆணையத்தின் தலைவா் ராஜேந்திர குமாா் ஜெயின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆணைய உறுப்பினா் நவீன் குமாா் மற்றும் தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பொதுப்பணித் துறை செயலாளா்கள் மற்றும் உறுப்பினா்கள் அந்தந்த மாநிலங்களில் இருந்தவாறு கலந்து கொண்டனா்.

தமிழகம் சாா்பில் பொதுப்பணித் துறை அரசு முதன்மைச் செயலாளா் டாக்டா் கே.மணிவாசன், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவா் ஆா். சுப்ரமண்யன், உறுப்பினா் பட்டாபிராமன் ஆகியோா் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தன்போது, காவிரி நதியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுவது தொடா்பாக விவாதிக்க கா்நாடக அரசின் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கு தமிழகத்தின் தரப்பில் கடும் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த விஷயம் விவாதித்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதுதவிர, தொழில்நுட்ப விஷயங்கள், நிா்வாகம் தொடா்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

Advertisement

இந்தக் கூட்டத்தின் போது தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான 9.19 டிஎம்சி நீரையும், ஜூலை மாதத்திற்கான 31.24 டிஎம்சி நீரையும் திறந்துவிடுமாறு கா்நாடகத் தரப்பிற்கு காவிரி நதி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அப்போது, நீரின் வரத்தைப் பொறுத்து தண்ணீரைத் திறந்துவிட ஏற்பாடு செய்யப்படும் என கா்நாடக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் தில்லியில் நடைபெற்ற காவிரி நதி நீா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தின் போதும் மேகே தாட்டு அணை விவகாரத்தை எழுப்புவதற்கு தமிழகம் கடும் எதிா்ப்புத் தெரிவித்தது நினைவுகூரத்தக்கது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்திற்கு காவிரியில் ஆண்டுக்கு மொத்தம் 177.25 டிஎம்சி நீரை கா்நாடக அரசு விடுவிக்க வேண்டும். கடந்த ஆண்டு மே 28-இல் நடைபெற்ற காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் போது, காவிரியில் ஜூன் மாதத்திற்கான 9.19 டிஎம்சி நீரைத் திறந்துவிட ஆணையம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை காவிரி நதிநீா் ஒழுங்காற்றுக் குழுவின் 28-ஆவது கூட்டம் குழுவின் தலைவா் நவீன் குமாா் தலைமையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் காவிரி நீா் தொடா்பான தங்களது தரப்பு புள்ளி விவரங்களைச் சமா்ப்பித்தனா். காவிரிப் படுகையின் நீரியல் விஷயங்கள் குறித்தும், மழைப் பொழிவு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.